Tuesday, July 21, 2009

எப்படி தான் சமாளிக்கிறாயோ....

பேசவேண்டியதை தவிர மற்றவையெல்லாம் பேசி விட்டு

தொலைபேசியை வைக்கும் போது

இருவரும் விடும் பெருமூச்சில் ஒளிந்திருக்கிறது காதல்...

*****************

நாம் ஒன்றாய் சுற்றும் போது எதிர்படும் என் நண்பர்களிடம்

உன்னை தோழியென்று அறிமுகப் படுத்த கஷ்டமாயிருக்கிறது

நீ எப்படி தான் சமாளிக்கிறாயோ....

*****************

யாருக்கும் தெரியாமல் எல்லாரும் காதலித்துக் கொண்டிருக்க

நான் உனக்கு தெரியாமல் உனையும்

நீ எனக்கு தெரியாமல் எனையும்

காதலித்துக் கொண்டிருக்கிறோம்.....

*****************

நமக்கிருவருக்கும் தனிமை வாய்க்கும் போது

எங்கே தோற்று விடுவோமோ

என பயந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு

பேசுகிறோம் அர்த்தமற்று...................

*****************

காதலை பறிமாறிக் கொள்வதற்கு முந்தைய

அந்த உணர்வை எவ்வளவோ

முயன்றும் வார்த்தைகளால் வடிக்க முடிவதில்லை தான்...

அத்தை பெண்

நாமிருவரும் ஒன்றாய் அமர்ந்து படிக்கும் சமயங்களில்
தெரியாமல் புத்தகத்தை மிதித்து விடும் என்னிடம்
'டேய் அது சரஸ்வதிடா தொட்டு கும்பிடுடா என்கிறாய்'

தெரிந்தே உன் கால்களை உரசி விட்டு
'டீ நீ தேவதைடி' என்று தொட்டு கும்பிட வந்தாலோ
முறைத்து விட்டு பின் துரத்த ஆரம்பிக்கிறாய்.

***************************************************

ஏதாவதொரு அடர்ந்த காட்டின் உயர்ந்த மரத்தில்
ஒரு இதயம் செதுக்கி ஒரு புறம் உன் பெயரையும் ,
மறு புறம் என் பெயரையும் எழுதுவதை விட
உன்னிடமே என் காதலை சொல்லிவிட எத்தனித்த
அந்த நாளில் நீ கல்லூரிக்கு வரவில்லை

அந்த நாளில் உன் குடும்பத்துடன் கொடைக்கானல்
சென்ற நீ மரத்தில் நம் பெயர்களை செதுக்கினாய்
என்பதை நாம் காதலை பரிமாறிய பின்
நடந்த கதையாடலின் போது சொன்னாயே நினைவிருக்கிறதா?

***************************************************

சிறுவயதில் விடுமுறையில் உன் வீட்டிற்கு
வந்த நான் உன்னை அடித்தாலோ உன்
விளையாட்டு பொருட்களை உடைத்து விட்டாலோ
அழுது புரண்டு ஊரைக் கூட்டி
உன் அப்பாவிடமும் சொல்லி விடுவாய்

இப்போதெல்லாம் கல்லூரி விடுமுறையில்
உன் வீட்டுக்கு வரும் சமயங்களில் உன்
இதழ் முத்தங்களை நான் திருடினாலோ
எனை தவிர்த்து விட்டு ஓடிப் போகும்
சமயங்களில் உனை பிடிக்க முயன்று
என் நகம் கீரி ரத்தம் வந்தாலோ சத்தம் போடாமல்
உன் நாட்குறிப்பில் எழுதுகிறாய் நடந்ததையெல்லாம்

***************************************************

நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின்
இறுதியில் எடுக்கபட்ட புகைப் படங்களிலும்
என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.

***************************************************


ஒன்றாய் அமர்ந்து தொலைக்காட்சி நோக்குகையில்
தொலைக்காட்சியில் வரும் முத்தக்காட்சிகளுக்கு
யாருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர்
திரும்பி பார்த்து சிரித்து கொள்கிறோம்


***************************************************

சிறு வயதில் நம்மிருவருக்கும் மொட்டையடித்து
கோவிலில் சாமி முன்னே 'இவனுக்கு இவள் தான்'
என என் அப்பாவும் உன் அப்பாவும் சத்தியம் செய்த
ஒரே காரணத்திற்க்காக மட்டும் தான் என்னை
கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறாய்

அதற்காக மட்டும் தானா?....
என நான் இருமுறை அழுத்திக் கேட்டால்
'ச்சி போடா' என்று முகத்தை பொத்திக் கொள்கிறாய்


***************************************************

நான் சிகரெட் பிடிப்பதை என் அம்மாவிடம்
சொல்லி விடுவாய் என்று சொன்னாய்
பரவாயில்லை சொல் அப்படியே உனக்கு
என்னை பிடிப்பதையும் சொல் என்றால்
வெட்கப் பட்டு ஓடி விடுகிறாய்
இப்படித்தான் தப்பித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு முறையும்..!!


***************************************************


சிறுவயதில் விடுமுறையில் உன் வீட்டுக்கு
நான் வரும் சமயங்களில் நாம்
நிறைய சண்டை போட்டுக் கொள்வோம்
ஆனாலும் இரவில் நம்மிருவரையும்
பக்கத்தில் தான் படுக்க வைப்பார்கள்.

இப்போது நாம் சண்டை போட்டுக் கொள்வதில்லை
அதிகம் பார்த்துக் கொள்கிறோம் சிரித்துக் கொள்கிறோம்
ஆனாலும் இரவில் உனக்கும் எனக்குமிடையில்
உன் தம்பியை படுக்க வைக்கிறார்கள்..!!!

***************************************************


பள்ளிக்கு என்னுடன் தான் உன்னை அனுப்புவார்கள்
உன் மீது கோபமிருக்கும் சயங்களில் வேண்டுமென்றே
கல்பாதையில் சைக்கிள் ஒட்டி உன்னை பழித்தீர்ப்பேன்

உன் அப்பாவிற்க்கு மாற்றலாகிப் போனதால்
வேரூர் சென்ற நீ எனக்கு
'நான் இப்போது சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டேன்
ஆனால் உன் பின்னால் உட்கார்ந்து செல்லத்தான் ஆசையாயிருக்கிறதென' எழுதிய கடிதத்தை அப்போது படித்த போது ஒன்றும் தோன்றவில்லை இப்போது மீண்டும் படிக்கும் போது தான் சிலிர்க்கிறது

***************************************************

கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை

***************************************************

நெடு நாளுக்கு பின்னர் என்னை
பார்த்த போது உன்னகேற் பட்ட வெட்கம்

இளம் வயதில் உன் அம்மா
என்னையும் உன்னையும்
ஆடைகளின்றி ஒன்றாய் குளிப்பாட்டிய போது
நீ வெட்கப் பட்டதை நினைவூட்டியதை
நான் எப்படி சொல்வேன் உன்னிடம்..!!

***************************************************

எல்லாருடம் சேர்ந்து ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நானும் நீயும் மட்டும் எப்போதும்
ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
அந்த நெற்குதிரின் மறைவில்
இன்று என் அக்கா குழந்தைகள் ஒளிந்து
விளையாடும் போது நின்று ரசிக்காமல்
போக முடியவில்லை என்னால்

***************************************************

நீ வயதுக்கு வந்த போது
உன்னை எல்லாரும் மாய்ந்து மாய்ந்து
கவனித்ததை கண்டு எரிச்சலுற்ற என்னிடம்

'எல்லாம் உனக்காக' தாண்டா என
உன் அம்மா சொல்லியதற்க்கு
அர்த்தம் புரிந்திருக்கவில்லை
எனக்கு அப்போது....

***************************************************

கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை.

உறக்கம் தொலைத்த இரவுகளில்...

1. "அன்றொரு நாள் தேர்வு அறையில்
நான் உன்னை பார்த்துக் கொண்டே எழுதியதை
நான் உன்னை பார்த்து தான் எழுதுகிறேன் என்று
தவறாய் புரிந்து கொண்ட ஆசிரியர்
தேர்வறையை விட்டு வெளியேற்றினாரே
நினைவிருக்கிறதா................?"

2. உன் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டும்
என்று உன்னிடம் நான் கேட்ட போது
'என்ன பரிசாகயிருந்தாலும் அது உன்னுடயதாக
நாளை உலகத்தில் பிறந்ததாக இருக்க வேண்டும்' என்றாய்.
நீ பரிசாய் கேட்டது என் கவிதைகளை
தான் என்பதை புரியாமல்
அன்றிரவு முழுவதும் யோசித்து விட்டு
ஒன்றும் தோனாமல் மறுநாள் உன்னிடம் சொன்னேன்...
அதற்கு நீ எனக்காக யோசித்து தூங்காமல் சிவந்த விழிகளும் வாடிய இந்த முகமும்
தான் என் பிறந்த நாள் பரிசென்று
என் முகத்தை உன் கைகளில் தாங்கி
இரண்டு கண்களுக்கும் முத்தமிட்டாயே நினைவிருக்கிறதா........?

3. நம் பள்ளி வேதியியல்
ஆய்வுக்கூடத்தில் வைத்து உன்
பிறந்த நாள் பரிசை கொடுத்து விட்டு
யாருமே பார்க்க வில்லை என்று நிம்மதியாக
ஒரு வாயில் வழியாக நீயும்
மறு வாயில் வழியாக நானும்
வந்து கொண்டிருந்ததை ஆய்வுக் கூடத்திற்கு
எதிர்ப்புறம் இருந்த வகுப்பறைகளின்
மாடியிலிருந்து எல்லா மாணவர்களும்
வரிசையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்களே
நினைவிருக்கிறதா.....?

4. ஆண்டு விழாவில் ஆடிய உன் நடனப் புகைபடங்களை
ஆசிரியர் அறையில் இருந்து எடுக்க(திருட) முயன்று
வசமாக சிக்கிக் கொண்ட என்னை ஒரு வாரம்
வகுப்பிலிருந்து தள்ளி வைத்திருந்தார்கள்..
அந்த நாள் இரவு தொலைபேசியில் எனை அழைத்து..
'ஆசிரியர் அறையிலிருந்து என் புகைப்படங்களை எடுக்க தைரியம் இருக்கிறது.....
நீ என்னை காதலிக்கிறேன் என்று சொல்ல தைரியமில்லையா.!!!1'
என்று செல்லமாக எனை கடிந்து கொண்டாயே
நினைவிருக்கிறதா..........???"

5. நம் காதல் விஷயம் பள்ளியில் பரவ
ஆரம்பித்த சில நாட்களில்
பள்ளியின் ஆண்டுவிழா வந்தது..
'கலைநிகழ்ச்சியில் அடுத்ததாக
தனி நடனம் -பரதநாட்டியம்'
என்று உன் பெயரை அறிவித்த உடனே
பள்ளி மாணவர்கள மட்டுமின்றி
ஆசிரியர்களும் என்னை திரும்பி பார்த்தார்களே நினைவிருக்கிறதா......?"

6. பார்வை பறிமாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த
அந்த ஆரம்ப நாட்களில்..
என்னுடைய இன்னொரு நண்பனும் உனை காதலிக்கிறான்
என்பதை அறிந்து நான் ஒதுங்கி கொள்கிறேன் என அவனிடம் கூறியதை
உன் தோழி மூலம் தெரிந்து கொண்ட நீ
நேராக என்னிடம் வந்து என் சட்டயை பிடித்து
'நம் காதலை விட்டுக் கொடுக்க நீ யாரடா ....ராஸ்கல்’
என்று ஒரு உலுக்கு உலுக்கி விட்டுப் போனாயே..
நினைவிருக்கிறதா......?"

7. தூரத்தில் என்னை பார்த்த உடனே
நீ தலைகுனிந்து நடக்க ஆரம்பிப்பாய்
நான் உனைக் கடந்து செல்லும்
அந்த ஒரு விநாடியில் சட்டென தலை நிமிர்ந்து
எனை பார்ப்பாய்
அந்த இடைவெளியும் உஷ்ணமும் நொடியும்
நம் இருவரின் டைரியிலும் அன்றையத் தினத்திற்க்கான
பக்கத்தில் நிரப்பப் பட்டிருக்கும்.

8. அசிங்கமாய் முடிவெட்டிக் கொண்ட நாட்களிலும்
இஸ்திரி பண்ணாத சட்டை அணியும் நாட்களிலும்
வகுப்பின் முதல் வரிசையில் அமராமல்
ஏதாவதொரு மூலையில் அமர்ந்திருப்பேன்
எனைக் கண்களால் தேடித் தேடி
நீ சளைக்கும் அழகை நான் ஒளிந்திருந்து ரசிப்பேன்....
கடைசியாக எனை நீ கண்டுபிடிக்கும்
அந்த நொடியில் மலரும் உன் முகம்
அந்த நொடிக்கு முந்தைய நொடிவரையிலுமிருந்த
என் நினைவுகளை ஒரேடியாக மறக்கச் செய்யும்.............

9. அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் தொலைப்பேசியில்
நிறைய கதைத்திருக்கிறேன்..
நம் காதலை மோப்பம் பிடித்து விட்ட
கணித ஆசிரியை
என்னை பற்றி உன் வகுப்பில்
பெருமையாக பேசும் தமிழாசிரியர்
என எல்லாக் கதைகளும் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் சமயத்தில்
சரி நான் வைக்கிறேன் பார்க்கலாம் என்பாய்..
நான் உடனே எப்போ பார்க்கலாம் என்பேன்.
கூடிய சீக்கிரம் என்பாய்...
இதே கேள்வியை நான் கேட்பேன் என உனக்கும்
அதே பதிலைத் தான் நீயும் சொல்வாய் என் எனக்கும் தெரியும்..
ஆனாலும் அந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல்
முடிந்ததில்லை நம் கதையாடல்..!

10. நீ தாவணி அணிந்தால் எனக்கு பிடிக்காது
அது உனக்கும் தெரியும்.
ஆனால் அன்று டியூசனுக்கு வேண்டுமென்றே
தாவணி அணிந்து வந்திருந்தாய்.
உனை கண்டுக் கொள்ளாமலேயே இருந்த
என் கவனம் கவர அடிக்கடி எனைக்
கடந்து சென்றாய்
உனை நான் பார்க்கும் போதெல்லாம்
இதழ்களை ஈரப்படுத்தியவாறே
கண்சிமிட்டினாய்
நான் பார்க்க மறுத்தால் எனைக்
கூப்பிட்டு பழிப்புக் காட்டுவாய்
அட இவளைக் கண்டுக் கொள்ளாமலிருந்தால்
ரசிக்கும் படியாய்
இவ்வளவு சேஷ்டை பண்ணுவாளா இவளென
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்
டியூசன் முடிந்த அந்த நேரத்தில்
என்னை கடந்து நீ போன போது
உன்னிடம் நான்
'நீ தாவணி அணிந்தால் எனக்கு பிடிக்காது'
என்றேன் மீண்டும்...!